Page Nav

HIDE

Breaking News:

latest

பரத்தை,மருங்கை,மட்டக்களப்பு சொல்லாட்சி....!

ஈழத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளது போலவே  மட்டக்களப்பு மாவட்டத்திற்கென்று  தனித்துவமான சில சொற்களுண்டு. சில வேளைகளில் அவற்றில் ச...

ஈழத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளது போலவே  மட்டக்களப்பு மாவட்டத்திற்கென்று  தனித்துவமான சில சொற்களுண்டு. சில வேளைகளில் அவற்றில் சில சொற்களை ஈழத்தின் பிற பகுதியினரால் கூடப் புரிந்து கொள்ள முடியாது, ஆனாலும் அவை ஆழமான பொருள் பொதிந்த பழந் தமிழ் மரபின் தொடர்ச்சியாகக் காணப்படும். 


எடுத்துக் காட்டாக: `பரத்தை` என்ற சொல்லின் `விலைமகள்` என்ற பொருள் எல்லோரும் அறிந்தது; மட்டக்களப்பில் இச் சொல்லுக்கு வேறொரு பொருளுமுண்டு.  வீடுவேய்தல், வேலியடைத்தல் போன்ற வேலைகளினை உறவினர், அயலவர் எல்லோரும் சேர்ந்து செய்வார்கள். அதன் முடிவில்  வேலை செய்து தந்த உறவினருக்கு வழங்கப்படும் உணவும் `பரத்தை` எனப்படும்.பரந்த அளவிற் சமைக்கப்படுதல் என்ற பொருளில் `பரத்தை` என அழைக்கப்படுகின்றது. எனவே அங்கு `பரத்தைக்கு வாங்க` எனக் கேட்டால் தவறாகக் கருதக் கூடாது. 

பரந்தளவில் சமைக்கப்படும் `பரத்தை` போல, `மருங்கை`என்ற வார்த்தை ஒன்றுமுண்டு. `மருங்கை’ என்ற பெயரில் உறவினர் மட்டும் கலக்கும் விருந்தும் ஒன்றுமுள்ளது. `கட்டாடி` என்றால் வண்ணான் என்ற பொருள் வேறிடங்களிலுண்டு, மட்டக்களப்பில் பூசாரியினையும் (குறிப்பாக  பெண் கடவுள்களுக்கான பூசாரி) கட்டாடி என்பார்கள். அவ்வாறான ஒரு சொற் பட்டியலினைக் கீழே பார்ப்போம்.  {இவை வேறு பகுதிகளிலும் பயன்பாட்டிலிருக்கலாம்}.


புற்கை = பொங்கல் {`உப்பின்று புற்கை உண்கமா கொற்கை யோனே ’ என்று பழஞ் செய்யுள் கூறும் புற்கை என்னும் சொல்லே இங்குப் புக்கை ஆயிற்று}
• கால்வாங்குதல் என்பது மகனைக் குறிக்கும்.
• போடியார் = நெற் செய்கைக்கு வேண்டிய முதலைப் போடுபவர்.
• குருவிக்காரன் = வயலிற் குருவிகளை ஓட்டிக் காத்தல் போன்ற குற்றேவல்களுக்காக நியமிக்கப்படும் சிறுவன்

• குருவிமூலை வரவை = குருவிக்காரனுக்கு வயலிலேயே தங்க வழங்கப்பட்ட சிறு குடில்/ இடம்.
• வட்டை வளைத்தல் = வயற் காவல் (வட்ட வடிவமாக வயலினைச் சுற்றி சுற்றிக் காவல் காத்தல்)
• அவுரி திரித்தல் = நெல் தூற்றுதல்
• `களவெட்டி` அல்லது `களவட்டி’= சூடு மிதிக்கும் களம்.
{ களவட்டி - வட்டமாக அமைந்த சூடுபோடும் நிலப் பரப்பு. (களம்+வட்டி. வட்டி = வட்டமானது)}

• ஆயம் = காணிக்குரிய குத்தகை
• அத்திமடக்கு = அரிக்கன்சட்டி (அரித்துக் கல்லே நீக்கும் வகையில் உள்வரிகளமைந்த சட்டி)
• அளைதல் - கைவிரலால் தொடுதல்
• ஆணம் = நீர்த்தன்மையான கறி      (சொதி போன்ற)
• ஆண்டார் = நிலா (இரவினை ஆளுபவர்)
• இட்டறுதி = (இட்ட+அறுதி) கடைசிக் காலம்
• எழுவான் = கிழக்கு  (எழுவான் கரை- படுவான் கரை ஊர்ப் பெயர்கள்).
• படுவான் = மேற்கு
• கட்டாடியார் = பூசாரி (குறிப்பாக பெண் தெய்வங்களுக்கான பூசாரிகள்)
• கட்டுச் சொல்லுதல் = தெய்வ வாக்குச் சொல்லுதல் (`கட்டுவிச்சி`பழந் தமிழ்ச்சொல்)
• உருவேறுதல்/ சன்னதம் கொள்ளுதல்= சாமி இறங்குதல் (`வெறியாடல்` பழந் தமிழ்ச்சொல்)
• கதியால் (கதி + கால்) = கூரிய அடியை உடையதாக வெட்டப்பட்ட (காட்டுக்)கம்பு.

• கப்புகன் = மண்டூர் முதலிய குறிப்பிட்ட சில ஊர்க் கோவில்களிற் பூசை செய்யும் பார்ப்பனரல்லாத பூசாரி
{ தெய்வத்தினிடம் மக்கள் வேண்டிய தைப் பெறுதற்கு வழிசெய்து கொடுக்கும் `கற்பகதரு` போன்றவன்}

• கப்புகக்குடி = கப்புகன் தோன்றும் மரபு (சாதி அல்ல)
• கமம் = வேளாண்மைச் செய்கை , வயல்.
• கலத்தில் போடுதல் = மண மகனுக்கு மணமகள் முதல் முதல் சோறு உண்பித்தல்.
• கள்ளறை = வீட்டில் மறைவிடமாக உள்ள சிறிய அறை.
• கழிசறை = பலராலும் கழிக்கப்பட்ட நடத்தையுடையவன்.
• கறுவித்தல் = பழிவாங்கக் காத்திருத்தல். {“ கறுவு கொள் நெஞ்சமொடு’ என்னும் திருமுருகாற்றுப்படையிற் போல}

• குச்சிக்குடில் =சிறியவிடு.

• குஞ்சப்பு=சிறிய தந்தை.

• குஞ்சாத்தை =சிற்றன்னை.

• குடக்குழி = கிணற்றின் நடுவில் (நீர் குறைந்த காலத்து) குடம்/ வாளி.

• குமுதம் = பேரொலிசெய்து விளையாடுதல்
• குளையடித்தல் = ஒருவரது மனத்தை மாற்றுதல்.
• கெளித்தல் = கவிழ்த்து ஊற்றுதல் (கெளுத்தி – கெளிற்றுமீன்..)
• சூம்புதல் = மெலிதல்
• செக்கல் = மாலைநேரம்.
• செத்தை :- ஒலையாற் கட்டப்பட்ட வேலி / சுவர்.
• தப்பிலி = தப்புள்ளவன் { தப்பு+இலி}.
['மங்கலம்' எனப்படும் வழக்கு] 
• தயிலாப்பெட்டி = மரத்தாற் செய்யப்பட்டதும் கள்ள அறைகள் உள்ளதுமான சிறுபெட்டி

• தாயதி = வழிவழி வந்த பழஞ் சொத்து; (`தாயம்` என்பதிலிருந்து வந்த சொல்).
• தாயம் = நல்ல தருணம்
• துமித்தல் =  மழை தூறுதல்
• ஆண் மாரி / பெண்மாரி = பாலினம் மாறியோர் { மாறி என்பதன் திரிபு ஆக வழங்கும். பெண்ணுய்ப் பிறந்து, ஆண் தன்மையும், ஆணாய்ப் பிறந்து பெண் தன்மை யும் உடையோர்}
• முளிவிசளம் = வீட்டைவிட்டு வெளிக்கிடும்போது ஒருவர் முதலில் சந்திக்கும் நிமித்தம் (சகுனம்).


 சில சொற்கள் திரிபடைந்த நிலையிலும் இன்று காணப்படுகின்றன. அவை வருமாறு.

** தலை வழித்தல் >> `மழித்தல்’ என்பதின் சிதைவு
`மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்த தொழித்து விடின் ’

** சிரைத்தல்>> சிதைத்தல் என்பதின் சிதைவு

** வட்டை>> (வயற் பரப்பு முழுவதும்) வெட்டை  என்பதின் சிதைவு

** அத்தக்கூலி >> அற்றைக் கூலி என்பதன் திரிபு ((அன்று + ஐ+கூலி) = நாட்கூலி

**கம்மாலை >> கம்மசாலை என்பதன் திரிபு (பட்டறை)

** கலம்பக்கயிறு >> கதம்பைக்கயிறு என்பதன் திரிபு (தென்னம் தும்பினல் செய்த கயிறு)

**காத்தாடி >> காவுதடி ’ என்பதின் சிதைவு. (கா+தடி)
சுமையினைத் தோளில் வைத்துச் சுமக்க உத வும் கம்பு. இதுவே இன்றைய மதம் சார் `காவடி` ஆக்கப்பட்டுவிட்டது.

நன்றி 
ஈழத்து வரலாறு 


No comments