Page Nav

HIDE

Breaking News:

latest

ஒப்பனைக்காரர்களின் வேடங்களை கலைக்க வந்திருக்கும் வேடன்

மொத்தக்கேரளமும் மூக்கில் விரல் வைத்து நிற்கிறது எங்கு பார்த்தாலும் அவனைப்பற்றிய பேச்சுதான் இயல்பான மலையாள வெள்ளை நிறத்துக்கு எதிரான அவனுடைய ...

மொத்தக்கேரளமும் மூக்கில் விரல் வைத்து நிற்கிறது எங்கு பார்த்தாலும் அவனைப்பற்றிய பேச்சுதான்

இயல்பான மலையாள வெள்ளை நிறத்துக்கு எதிரான அவனுடைய நிறம்,அவனது குரலுக்கு தடையாக இல்லை

யாரடா இந்த பெடியனெனும் அவர்களின் கேள்விகளுக்கு விடையும் அவனே சொல்கிறான்


கன்னியாகுமரி முதல் காசர்கோடு வரை தென்மேற்கு பருவமழை பின்னி பெடலெடுத்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் கூட,சமூக வலைதளங்களின் வழியே அவன் நுழையாத வீடுகளில்லை எனுமளவிற்கு மொத்த கேரளத்தையும் ஆக்கிரமித்து நிற்கிறான்.

கடந்த 2020 ஆம் ஆண்டு #VoiceOfVoiceless  என்னும் பெயரில், வெறும் பத்தாயிரம் ரூபாய் செலவில் வெளியிடப்பட்ட அவனது முதல் ஆல்பம், மெது மெதுவாக பரவ ஆரம்பித்தாலும்,அதில் சொல்லப்பட்ட கருத்துக்கள் ஓரளவு விவாதத்திற்கு வரவே செய்தது.

ஒரு ஈழத் தாய்க்கும், கேரளத்து தந்தைக்கும் மகனாகப் பிறந்த அவனது இருப்பிடத்தின் பெயர் ஸ்வப்ன பூமி. கேரளத்தின் கலாச்சார தலைநகரமான திருச்சூர் ரயில் நிலையத்தினருகே இருக்கும் அந்த ஸ்வப்ன பூமி இன்று கூகுளில் அதிகம் பேரால் தேடப்படக் கூடிய ஒரு பகுதியாக மாறி இருக்கிறது.

பேட்மிட்டன் போட்டியில் சர்வதேச பட்டத்தை சகோதரி பி.வி. சிந்து வென்ற போது,இந்தியா முழுவதும் அவர்  கூகுளில் தேடப்பட்டது அவரது திறமைக்காகவோ அல்லது அவருடைய கல்விக்காகவோ அல்ல,மாறாக அவருடைய ஜாதிக்காக என்பது அவ்வளவு எளிதில் மறக்கக் கூடியதல்ல...

ஜாதிய கட்டுமானம் நிறைந்த கேரளாவில் ஒரு ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்து கருப்பு நிறத்தில் கிளர்ந்தெழுந்து வந்து,அத்தனையாண்டு காலம் பாலக்காட்டு அலமாரிகளுக்குள்  பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த படிநிலை கட்டுமானங்களை உடைத்தெறிந்து,கூகுளே திணறுமளவிற்கு தேடப்பட்டான் 

#ஹிரந்தாஸ்_முரளி எனும் 30 வயது நிரம்பிய #வேடன், இன்றைக்கு மலையாள உலகின் சூப்பர் ஸ்டார்களான மம்முட்டியையும், மோகன்லாலையும் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் நிற்பது நமக்கு ஒரு வகையில் பெருமைதான். அதற்குக் காரணம் அவன் பேசும்,பாடும் மொழியான நம் தமிழ்.


இதுவரை கேரளத்தில் பகிரங்கமாக சாதியைப் பற்றி பாடல் பாடப்பட்டதுமில்லை,,படம் வந்ததுமில்லை. 

ஆனால் அங்கும் ஜாதி இருக்கிறது என்பதை விட, ஆழமாக இருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ஒரு நூற்றாண்டிற்கு முன்பே அதாவது,1903 ஆம் ஆண்டு பத்மநாபன் பல்பு என்பவரால் உருவாக்கப்பட்ட ஸ்ரீ நாராயணகுரு தரும பரிபாலனை யோகம் தான் அந்த நாட்டின் முதல் சாதிச் சங்கம். சமூகத்தின் விளிம்பு நிலையில், நம்பூதிரிகளாலும், நாயர்களாலும் அடக்கப்பட்டுக் கிடந்த ஈழவ மக்களுக்கும் தீயர் சமூக அப்பாவிகளுக்கும் எழுச்சியூட்டுவதற்காக உருவாக்கப்பட்ட அந்த சங்கத்தின் தொடர் வேலை தான் இன்றைக்கு அச்சுதானந்தனையும், தோழர் பினராயி விஜயனையும் கேரளாவின் முதலமைச்சராக்கி இருக்கிறது என்றால் அதுதான் உண்மை.

என்னதான் கம்யூனிஸ்ட்டாக இருந்தாலும், ஒன்று நம்பூதிரியாக இருக்க வேண்டும் அல்லது நாயராக இருக்க வேண்டும் என்பதை உடைத்தெறிந்ததிலே இந்த சாதிச் சங்கத்திற்கு பெரிய பங்கு இருக்கிறது. 

உயர்சாதி நாயர்களுக்கு என 1914 ஆம் ஆண்டு மன்னத்து பத்மநாபன் என்பவரால் கட்டி அமைக்கப்பட்ட நாயர் சர்வீஸ் சொசைட்டியின் நோக்கம் தங்களுடைய சமூகக் கட்டமைப்பினுடைய இறுக்கத்தை குலையாமல் பாதுகாப்பது. 

சாதிய கட்டுமானங்கள் நிறைந்த அதே கேரளத்தில்,மேற்படி சங்கங்கள் தொடங்கப்பட்ட சமகாலத்திலேயே அதாவது,1913 ஆம் ஆண்டு கள்ளச்சமுறி கிருஷ்ணாடி ஆசான் தொடங்கிய புலையர் மகா சபை கேரள சமூக சீர்திருத்த வரலாற்றில் ஒரு மைல் கல்.

இந்தச் சங்கங்களை விட கேரள மண்ணில் தோன்றிய பண்டிட் கருப்பன், அய்யாதன், கோபாலனாசான்,ஐயங்காளி,சோதரன் ஐயப்பன், சட்டம் பி சுவாமிகள், குமரனாசான், டி கே மாதவன், வைக்கம் மௌலவி போன்ற எத்தனையோ சமூக சீர்திருத்தவாதிகள் களத்தில் நின்றாலும் அவை எல்லாவற்றையும் ஒரு மேடையில் அடித்து வீழ்த்தியது வேடனின் அடக்குமுறைக்கு எதிரான குரல் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

ஒரே ஜாதி, ஒரே மதம், ஒரே கடவுள் அனைவருக்கும் என்கிற ஸ்ரீ நாராயண குருவின் முழக்கம் தோன்றி நூறாண்டுகளான பின்பும், அதை உறுதிப்படுத்த ஒருவன் வரவேண்டிய தேவையும் அவசியமும் ஏற்பட்டிருக்கிறது ,,,அவன்தான் வேடன் எனும் மகா கலைஞன்.

வெறுமனே உள்ளூர் சாதிய கட்டுமான இறுக்கத்தை உடைத்தெறிவதற்கு மட்டும் அவனுடைய குரல் ஒலிக்கவில்லை மாறாக சிரிய உள்நாட்டு போர், இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனை, கூடுதலாக இந்தியாவில் கொளுந்து விட்டெரியும் பிரச்சனைகளுக்காகவும் அவனுடைய குரல் ஓங்கி ஒலிக்கிறது.

இதே கருப்பு நிறத்தில் வயநாட்டில் களத்தில் நின்று சண்டமாருதம் புரிந்த சகோதரி ஜி.கே.ஜானு வை இன்று வரை ஏற்றுக் கொள்ளாத மலையாளச் சமூகம், வேடனை ஏற்றுக் கொண்டதற்கு பின்னால் இருப்பது அவனது குரல், வசீகரம் மட்டுமல்ல, அவனது எழுத்தும்தான். 

முற்போக்கு சிந்தனைகளோடு வயநாட்டு முத்தங்காவில்  களத்தில் மூர்க்கத்தனம்  காட்டிய ஜி.கே

 ஜானு அவளது நிறத்திற்காகவே ஒதுக்கப்பட்ட வரலாறு கொடியது. 

வயநாடு மண்ணிலிருந்து மானந்தவாடி,வைத்ரி,தாமரைச்சேரி வழியாக  திருச்சூர் ஸ்வப்னபூமிக்கு வந்து சேர்ந்திருக்க்கூடும். 


நெஞ்சில் அவன் குத்தி இருக்கும் #அ என்கிற பச்சையும் 

ராவணன் என்னுடைய நாயகன்,அவன் என்னுடைய பெரும் பாட்டன் என்று தமிழில் சிலாகித்து அவன் பேசுவதும் 

அநாயாசமாக மேடையில் மலையாளமும் தமிழும் கலந்து பாடுவதும்

தன் தாய் பிறந்த நிலத்தின் அவலத்தை ஒளிக்காது, மறைக்காது உரத்து முழக்கமிடுவதும் 

வேடனை அடுத்தடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லக்கூடும் 

ஆனால் பாலக்காடு நகராட்சியின் ஒரு உறுப்பினரான சகோதரி வி. எஸ்.மினி மோல் வேடனின் பாடல்கள் சாதிய பயங்கரவாதத்தை தூண்டுவதாக நேரடியாக *தேசிய புலனாய்வு முகமையிடம்* அளித்திருக்கும் புகார் கவனிக்கத்தக்கது. 

கூடுதலாக கேரளாவில் இருந்து வெளிவரும் வலதுசாரிகளின் கேசரி இதழில்,வேடன் சாதி பயங்கரவாதத்தை தூண்டுவதாக எழுதப்பட்டது பிரச்சினையாகி, இன்றைக்கு கேசரியின் ஆசிரியர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. 

ஆறு கிராம் கஞ்சா வைத்திருந்தான்,புலிப்பல்லை தன்னுடைய கழுத்திலே அணிந்திருந்தான் என்கிற குற்றச்சாட்டுகள் போகிற போக்கில் எழுப்பப்பட்டு காவல்துறை விசாரணைக்காக திருச்சூர் நகரத்து வீதிகளில் அவன் அழைத்துவரப்பட்டபோது, விழவிழ எழுவோம், விழுந்து விட மாட்டோம் என்கிற ஈழத்து முழக்கமே எனக்கு நினைவுக்கு வந்தது. 

வியர்வையால் தைக்கப்பட்ட சட்டை எனது உடல் என்கிற வேடனின் பாடலை நக்கலடித்து அது வியர்வையால் தைக்கப்பட்ட சட்டை அல்ல, கஞ்சாவால் தைக்கப்பட்ட சட்டை என்று சாதிய வன்மத்தோடு ஏசியாநெட் விமர்சித்த போது அவனது பதில் ஒரு எக்காளச் சிரிப்பு...

ஆறுதலாக இடதுசாரிகளின் நான்காவது ஆண்டு நிறைவு விழாவில் கேரளத்து முதலமைச்சரோடு வேடன் மேடை ஏறியது ஒரு ஆறுதல் 

துள்ளல் நடை,வசீகரிக்கும் சிரிப்பு, ஒழுங்காக அலங்கரிக்கப்படாத கேசம், அணிந்திருக்கும் முண்டா பனியன், ஒரு கலைஞனுக்கு உண்டான எதுவுமற்ற அவனுடைய பாவனை,கூடும் கூட்டம்,ஆடும் ஆட்டம் என மொத்த கேரளமும் வேடன் எனும் ஈழத்தமிழ் கருப்பனுக்கு பின்னால் மயங்கி கிடக்கிறது.

அவனை இடதுசாரிகளோ, வலதுசாரிகளோ இனி எத்தனை முறை கைது செய்தாலும் எங்களுக்கு கவலை இல்லை...


அவன் பிறந்த மண் உயிரை துச்சம மதித்த மண்...

துவக்கு ஏந்தியவர்களும் களத்தில் நின்றார்கள், வெள்ளைக்கொடிக்கும் திலீபன் வழியிலே அங்கு வேலை இருந்தது.

அவனை நீங்கள் அடக்கி ஒடுக்கினால் தான் அவன் எழுவான்...

ஆகவே அடக்கி ஒடுக்குங்கள்

சங்கு சுடச்சுடத்தான் வெண்மை தரும்... 

சாதிய வன்மங்களை, தாங்கள் போடும் சட்டைகளில் ஒளித்து வைத்திருக்கும் மலையாள கும்பல்களுக்கு அவனது இருப்பு ஒரு எச்சரிக்கை 

நாங்களே மூலவர்களெனும் நம்பூதிரிகளின், நாயர்களின் இன்னும் மிச்சமிருக்கும் அத்தனை பேருடைய கனவுகளையும் கலைத்துப் போடும் அந்த குரல் இனி உலகமெங்கும் ஒலிக்கும் காலம் வரும் 

 அவன் வார்த்தைகளோ …..இல்லை …..உலகளாவிய ரீதியில் அவன் பேசும் அரசியல் புறக்கணிப்பு யதார்த்தங்களோ ……இல்லை …..அகதியாய் துரத்தப்பட்ட அவனின் வலிகளைப் பேசும் கண்களையோ ….. புலி மீது அவன் கொண்ட காதலோ ….இல்லை ஈழத் தாயவளின் மீது அவன் காட்டிய அன்போ எதுவென்று நானறியேன்! என் மகளைக் கவர்ந்தது எதுவென்றும் தெரியவில்லை! ஆனால் “அம்மா வேடனைச் சந்திக்கலாமா?” ……

அவளும் நானும் அவனை ஒரு தடவையேனும் சந்திக்க வேண்டும்!
அ - அம்மா அப்பா அன்பு அறிவு அழகு அஞ்சாமை ….வேடன்!
நன்றி வெகுசனவாதி



No comments