தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை முற்றாக ஒழிக்க வேண்டும்: ஜனாதிபதிக்கு வடபுல மீனவர்கள் கோரிக்கை
மன்னார்: இலங்கை கடற்பரப்பிற்குள் பயன்படுத்தப்படும் அனைத்து விதமான தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளையும் அரசு பாரபட்சமின்றி கட்டுப்படுத்த வேண்டும் எனவும், குறிப்பாக உள்நாட்டு மீனவர்களால் முன்னெடுக்கப்படும் உழவு இயந்திரம் (Tractor) மூலமான கரைவலைத் தொழில் உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களை முற்றாகத் தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் இன்று (28-01-2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இக்கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டன. மன்னார் நேசக்கரம் பிரஜைகள் குழுவின் பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்தச் சந்திப்பில், மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கங்களின் சமாச செயலாளர் ஆலம் அவர்கள் கலந்துகொண்டு மீனவர்களின் தற்போதைய கள நிலவரம் குறித்து விளக்கமளித்தார்.
உள்நாட்டுச் சட்டவிரோத மீன்பிடியும் வாழ்வாதாரப் பாதிப்பும்
இலங்கை கடல் தொழில் அமைச்சினால் பல மீன்பிடி முறைகள் தடை செய்யப்பட்டுள்ள போதிலும், மன்னார் உள்ளிட்ட வடபகுதியின் சில இடங்களில் இன்னும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்வது கவலைக்குரியது. குறிப்பாக, உழவு இயந்திரங்களை (Tractor) பயன்படுத்தி கரைவலை இழுப்பது மற்றும் ஏனைய தடைசெய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்துவது கடல் வளத்தை முற்றாக அழிப்பதாக அமைந்துள்ளது. இத்தகைய முறைகளால் பாரம்பரிய மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் சாதாரண மீனவக் குடும்பங்கள் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். அரசு எவ்வித பாரபட்சமும் இன்றி இவர்களைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என மன்னார் மாவட்ட மீனவ சங்கங்களின் சமாசச் செயலாளர் ஆலம் வலியுறுத்தினார்.
இந்திய இழுவைப்படகுகளின் தொடரும் ஆக்கிரமிப்பு
மறுபுறம், இந்திய இழுவைப்படகுகள் எல்லை தாண்டி வந்து எமது கடற்பரப்பைச் சுரண்டுவது தொடர்கதையாகவே உள்ளது. மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகளை இந்த இழுவைப்படகுகள் அறுத்துச் செல்வதால், மீனவர்கள் பாரிய பொருளாதார இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர். இது வடபுல மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சிதைத்து வருகின்றது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மீது நம்பிக்கை
"தடை செய்யப்பட்ட மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்கள் எமது நாட்டு மீனவர்களாக இருந்தாலும் அல்லது இந்திய மீனவர்களாக இருந்தாலும், சட்டம் அனைவருக்கும் சமமாகப் பாய வேண்டும்" என்பதே மீனவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
ஊழலற்ற ஒரு நிர்வாகத்தை முன்னெடுத்து வரும் கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள், வடபுல மீனவர்களின் இந்தப் நீண்டகாலப் பிரச்சினையில் நேரடியாகத் தலையிட்டு, தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுப்பார் என மீனவ சமூகம் ஆழமாக நம்புகிறது. புதிய அரசின் கீழ் எமது கடல் வளமும், மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.
COMMENTS