நுண்நிதிச் சட்டத்தினால் பெண்களுக்கு பாதிப்பு மன்னாரில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்
மன்னார் நிருபர்: 03-03-2026
மன்னார்: நிதியமைச்சினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தினால் கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் சுய உதவிக்குழுக்களின் சேமிப்புகள் பாதிக்கப்படுவதைக் கண்டித்து, மன்னாரில் இன்று (செவ்வாய்க்கிழமை) பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தின் பின்னணி
மன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில், மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் நடைபெற்றது. உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள் மற்றும் சமூக மட்டத்தில் சிறு சேமிப்பு, கடன் வழங்கும் சேவைகளை முன்னெடுக்கும் பெண்களை இலக்கு வைத்து இப்புதிய சட்டம் கொண்டு வரப்படுவதால், தமக்கு ஏற்படவுள்ள பாரிய பொருளாதாரப் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு பெண்கள் வீதிக்கு இறங்கினர்.
மன்னாரில் மாணவர் போக்குவரத்து மானியத் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல்
முழக்கங்களும் கோரிக்கைகளும்
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். குறிப்பாக:
"கிராமிய சேமிப்புத் திட்டங்களை அழித்து, நிதி நிறுவனங்களுக்கும் வட்டிக்காரர்களுக்கும் வாய்ப்பளிக்காதே!"
"இச்சட்டம் பெண்களை மீண்டும் நுண்நிதி நிறுவனங்களுக்கு அடிமையாக்க வழிவகுக்கிறது."
"அவசரத் தேவைக்குக் கைகொடுக்கும் ஒரே வழியான சமூகச் சேமிப்புத் திட்டங்களைத் தடை செய்யாதே!"
"நாங்கள் சட்டத்திற்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் ஏழைகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் விடயங்களை மீள்பரிசீலனை செய்யுங்கள்!"
போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இச்சட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், பல தசாப்தங்களாகப் பெண்கள் கட்டிக்காத்த சுய உதவிக்குழுக்களின் சேமிப்புகள் ஆபத்துக்குள்ளாகும் என அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.
அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு
போராட்டத்தின் நிறைவில், பெண்கள் ஊர்வலமாகச் சென்று மன்னார் மாவட்டச் செயலக நுழைவாயிலில் வைத்து ஜனாதிபதிக்கான விசேட மகஜர் ஒன்றை மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களிடம் கையளித்தனர்.
மகஜரைப் பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர், பெண்களின் இந்தக் கவலைகளைப் புரிந்துகொள்வதாகவும், குறித்த மகஜரை உடனடியாக ஜனாதிபதியின் கவனத்திற்கு அனுப்பி வைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
tamilviyugam12@gmail.com

COMMENTS